நாளை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியமர்வில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வடக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும்.
கடந்தவாரம், இடம்பெறவிருந்த இந்தச் சந்திப்பு வட மாகாண முதலமைச்சர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.