மேலும்

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாடு சீரழிந்து போகும் – வடமாகாண முதல்வர்

CM-NPCநாட்டைப் பிரிக்காது, நாம் தனித்து வாழும் அதே நேரம், சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். இந்தச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போகும். சின்னாபின்னமாகி விடும். என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாணசபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைவின் இறுதி வடிவத்தை நேற்று வட மாகாணசபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“பல நாட்களின் பிரயத்தனங்களின் பின்னர் இக்கொள்கை முன்மொழிவை உங்கள் முன் சமர்ப்பிக்கக்கூடியதாக இருப்பதையிட்டு மகிழ்வடைகின்றேன். குறைமாதக் குழந்தைபோல நாங்கள் உங்கள் முன் சமர்ப்பித்த ஆரம்ப சமர்ப்பணங்கள் நாடு பூராகவும் பவனிவந்து பலத்த விமர்சனங்களை ஏற்கனவே எதிர்நோக்கியுள்ளன.

இந்த ஆவணமானது எம் எல்லோரின் எதிர்பார்ப்பையும் எடுத்தியம்பும் ஆவணமென்றே கூற வேண்டும். மூன்று குழுக்கள் அமைத்து அவற்றின் சமர்ப்பணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதே இந்த வரைவு. ஆகவே, நாம் யாவரும் அதன் ஆக்கியோரே. இது தனிப்பட்ட ஒருவரின் வரைவாகாது.

நேற்றிரவுகூட எம்முள் மூவர் இரவு வெகுநேரம்வரை வரைவை சரிபிழை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் வரைவை நீங்கள் யாவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

ஒருவரின் சமர்ப்பணங்களை நாங்கள் கைவிட வேண்டியதாய் இருந்தது. அவர் எமது இறையாண்மை பற்றி ஆவணத்தில் இடப்பெறச் செய்ய வேண்டும் என்று வாதாடினார். இறையாண்மை என்ற கருத்து பல்வேறு கருத்து வேற்றுமைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளடக்கப்பட்டதொன்று.

போர்த்துக்கீசர் எம்மை வெற்றி கொண்டபோது எமது இறையாண்மை இல்லாதொழிந்தது. பின்னர் டச்சுக்காரர், ஆங்கிலேயர் என்று பலரின் அதிகாரத்தினுள் எமது இறையாண்மை சிக்கிக் கொண்டது.

ஆனால், நாடு சுதந்திரம் அடைந்தபோது நாம் எமது இறையாண்மையைத் தனித்துவமாகக் கோராமல் மற்றைய மக்களுடன் கூட்டமாகச் சேர்ந்து இலங்கை மக்களுக்கான இறையாண்மை என்ற கோரிக்கையினுள் அமிழ்த்திவிட்டோம்.

ஆகவே,அது பற்றிப் பேசாமல் சர்வதேச ஒப்பந்தங்களில் காணுமாறு மக்கட் குழாம் தனது தனித்துவத்தைப் பேண எந்தவாறான தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியே இந்த ஆவணத்தைத் தயாரித்துள்ளோம்

கூடியவாறு முரண்பாடுகளையும் தீவிரப் போக்குகளையும் கட்டுப்படுத்தியுள்ளோம். தீவிரப் போக்கு என்பது நாம் எந்தக் கோணத்தில் இருந்து பார்க்கின்றோம் என்பதையொத்தது.

எம்மைப் பொறுத்தவரை மிகவும் சாதாரண கருத்து வெளியிடலாக உள்ள இந்த ஆவணம் தெற்கில் பலரைப் பேயாட்டம் ஆட வைத்துள்ளது. முதலமைச்சரைக் கைது செய்ய வேண்டும் என்று கோருகின்றது ஒரு கட்சி.

ஒரு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் பிரச்சனையின் சகல பரிமாணங்களையுந் தெரிந்துகொள்ள வேண்டும். அறிவு பூர்வமாக அதனை அணுக வேண்டும். உணர்ச்சி பூர்வமாக அணுகுவதால் பிரச்சனைகள் மேலும் வலுவடைவன.

நாங்கள் எங்கள் ஆவணத்தில் கூறியிருக்கும் விடயங்கள் எவையும் புதியவையல்ல. காலஞ் சென்ற தந்தை செல்வா போன்றவர்கள் கூறியதையே நாங்கள் இங்கு வலியுறுத்தியுள்ளோம். பிரிவினைக்கு எதிர்மாறான ஒரு கருத்தையே முன்வைத்துள்ளோம்.

நாட்டினுள் அதிகார அலகுகளை உண்டாக்குவது அந்தந்த மக்கட் கூட்டங்கள் தத்தமது இடங்களில் தங்கள் விடயங்களைத் தாங்களே கையேற்று நிர்வகிக்கவே. இதுவே ஜனநாயகம்.

அண்மையில் தினேஸ் குணவர்த்தன அவர்கள் கூறிய ஒரு கூற்றுக்குச் சிங்களத்திலும் தமிழிலும் பதில் அளித்திருந்தேன். சமஷ்டி என்ற கருத்தை ஏதோ தடைசெய்யப்பட்ட ஒரு கருத்தாக அவர் கூறியமையினால் அவருக்கு சமஷ்டி என்பதற்கான ஒரு சிறிய உதாரணத்தைக் கொடுத்திருந்தேன்.

அவரின் தந்தை பிலிப் குணவர்த்தனாவை நான் தெரிந்திருந்தேன். பிலிப் குணவர்த்தனாவின் பாரம்பரிய வீட்டில் இந்திக, தினேஷ் போன்ற பிள்ளைகள் வளர்ந்து வந்திருப்பார்கள்.

அவர்கள் திருமணம் செய்த பின்னரும் அதே பாரம்பரிய வீட்டில் இருப்பது சரியில்லை என்று குறித்த பாரம்பரிய வீட்டுக் காணியில் தனி வீடுகள் கட்டிக் கொடுத்து சகோதரர்களில் ஒருவரான தினேஷை தமது குடும்பத்துடன் அங்கொரு வீட்டில் குடியேற விடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதனைப் பிரிந்து செல்வதாக எவரும் சொல்ல மாட்டார்கள். ஒரே பாரம்பரிய வீட்டில் தாய் தந்தையருடன் பிள்ளைகள் சுதந்திரமாய் வாழ்வதை எவரும் வரவேற்பார்களே ஒளிய அதைப் பிரிவினை என்று கூற மாட்டார்கள். சமஷ்டியும் அவ்வாறுதான்.

நாட்டைப் பிரிக்காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். அதனை வலியுறுத்தியே எமது வரைவை நாம் யார்த்திருக்கின்றோம். நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும் இசைவையும் நல்க வேண்டும்.

முன்னர் 1958இல் சேர்ந்து வாழ ஒரு வழி அமைக்கப்பட்டது. பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று கூட அன்று போல் எம்மையே முதலுதாரணமாகச் சிங்கப்பூர் போன்ற நாடுகள் எடுத்துக் காட்டியிருப்பன.

லீ குவான் யூதான் சிங்கப்பூரை இலங்கை போல் மாற்றுவேன் என்று அன்று சூளுரை உரைத்திருந்தார்.

இன்று இந்த ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் நழுவ விட்டால் இந்த நாடு சீரழிந்து போகும். சின்னாபின்னமாகி விடும். இது வெறும் வாய்ச்சொல் அல்ல.

எந்த ஒரு இனமும் தொடர்ந்து அடிமைப்பட்டிருக்க விரும்ப மாட்டாது. யார் இல்லை என்றாலும் நாங்கள் இன்று ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தினரின் மேலாண்மையின் கீழ்த்தான் வாழ்கின்றோம்.

இந்தியாவின் அனுசரணையால் வடக்கு மாகாணசபை என்று ஒன்று கிடைத்தாலும் எம்மால் எம்மைச் செவ்வனே ஆள சட்டம் இடங் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தம்.

எனவே, எமது மொழி, இடங்கள், மதங்கள், கலாசாரப் பின்னணி என்பன மற்றையோரால் சூறையாடப்படாமல் அவற்றைப் பாதுகாத்து சுமூகமாக எல்லோருடனும் சகஜ வாழ்வு வாழக்கூடிய விதத்திலேயே எமது வரைவை முன்வைத்துள்ளோம். அதனை முழுமையாக வாசிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன்“  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *