வட, கிழக்கிற்கு சமஸ்டி கோரும் தீர்வு யோசனைக்கு வடமாகாணசபை அங்கீகாரம்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி ஆட்சிமுறையை உள்ளடக்கியதான, அரசியலமைப்புத் திருத்த யோசனையை வடக்கு மாகாணசபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
வடக்கு மாகாணசபையின், 19 பேர் கொண்டு குழுவினால் தயாரிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட, தீர்வு யோசனையின் இறுதிவடிவத்தை நேற்று, வடமாகாணசபையின் சிறப்பு அமர்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்திருந்தார்.
நேற்றுக்காலை தொடக்கம் பிற்பகல் வரை நடந்த விவாதங்களின் பின்னர், இந்த வரைவுக்கு வடக்கு மாகாணசபை அங்கீகாரம் அளித்தது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஸ்டி ஆட்சிமுறையை கொண்டு வரும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்தம் அமைய வேண்டும் என்று இந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.
நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த வரைவு, வரும் 30 ஆம் நாள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது.