ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகள் – மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லையாம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரின் விடுதலை தொடர்பாக, இந்திய மத்திய அரசு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆங்கில நாளிதழில் நேற்று வெளியான செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி பல்வேறு ஊடகங்கள் “ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்று செய்திகளை வெளியிட்டன.
இது குறித்து புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சின் உயரதிகாரி கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், சம்பந்தப்பட்ட கைதிகளும் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த விடயத்தில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து மத்திய சட்டத்துறையின் கருத்தை உள்துறை கேட்டுள்ளது. சட்டத் துறை தெரிவிக்கும் கருத்து தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திய பின்னரே அதன் முடிவை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.
தற்போதைய நிலவரப்படி மத்திய சட்டத் துறை, அதன் கருத்தை உள்துறைக்கு அனுப்பி வைக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தேர்தலுக்குப் பிறகு இந்த விடயத்தில் முடிவு எடுக்க மத்திய உள்துறை தீர்மானித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்கும் தமி்நாடு அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம். அப்போது தமிழ்நாடு தேர்தலுக்கு பிறகு இந்த விவகாரத்தை விசாரிக்க கேட்டுக் கொள்ளப்படும்.
இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்” என்று உள்துறை அமைச்சின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.