யோசித குறித்த சிறிலங்கா கடற்படையின் நிலைப்பாடு – விரைவில் அறிவிப்பு
லெப்.யோசித ராஜபக்சவின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பான சிறிலங்கா கடற்படையின் நிலைப்பாடு தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
லெப். யோசித ராஜபக்ச தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா கடற்படைத் தளபதியால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர பதிலளித்தார்.
‘லெப். யோசித ராஜபக்ச ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டது, பயிற்சிக்கு அனுப்பப்பட்டது போன்ற முறைகேடுகள் குறித்து கடற்படையின் நிலைப்பாடு குறித்த அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும் அல்லது அடுத்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.