சிறிலங்கா கூட்டுப்படைகளின் தளபதி புதுடெல்லியில் – உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சென்றார்
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நான்கு நாள் பயணமாக புதுடெல்லி சென்ற அவருக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர், போர் வீரர்கள் நினைவாக அமர் ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார்.
இந்தப் பயணத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தளபதிகளையும் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், நாளை மும்பையில் உள்ள மேற்குப் பிராந்திய கடற்படைத் தளத்துக்கும் அவர் செல்லவுள்ளார்.