அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் வடக்கு ஆளுனர், பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் வட மாகாண ஆளுனர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்காவுக்கு இன்று வந்து சேர்ந்த பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், இன்று மதியம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதையடுத்து, இன்று மாலை சிறி்லங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்ற அவர், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச்சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயையும் அவர் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்கள் நீண்ட நேரம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக, தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்புகளில், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும் கலந்து கொண்டுள்ளார்.