அமெரிக்க கட்டளைக் கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது
ஆறுநாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க கடற்படையின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் நேற்றுமுன்தினம் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
கடந்த மார்ச் 26ஆம் நாள் அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
ஆறு நாட்களாக கொழுழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற போது, இந்தக் கப்பலில் இருந்து அதிகாரிகள், மாலுமிகள், சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியதுடன், பல்வேறு நிகழ்வுகளிலும் இணைந்து பங்கெடுத்திருந்தனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறிசேன உள்ளிட்ட சிறிலங்கா அரசின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் இந்தக் கப்பலுக்குச் சென்று பார்வையிட்டிருந்தனர்.
ஊடகவியலாளர்களும், கொழும்பு பாடசாலைகளின் மாணவர்களும் இந்தக் கப்பலைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் சென்றது. இதன்போது சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்கள் அணிவகுத்து விடைகொடுத்தன.
கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து வழிப்பயிற்சிகளை அமெரிக்க கடற்படையினர் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.