மேலும்

ஓடுபாதையை விரிவாக்காமல் தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையம் – ஒரு ஆண்டில் செயற்படும்

Passenger_Terminal-Palaly_Airportஓடுபாதையை விரிவாக்கம் செய்யாமல் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தயமுயர்த்துவதற்கு இந்திய- சிறிலங்கா அதிகாரிகள் இணக்கம் கண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பி்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கு காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு வலி.வடக்குப் பகுதி மக்களிடம் இருந்த எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பலாலிக்கு வந்து ஆராய்ந்த இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரிகள் ஐந்து பேர், ஓடுபாதையை விரிவாக்காமலேயே விமான நிலையத்தை தரமுயர்த்த முடியும் என்று தெரிவித்ததாக, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

”வழக்கமாக, விமான நிலையங்கள் கட்டப்படும் போது எதிர்கால போக்குவரத்து, மற்றும் பெரிய விமானங்கள் என்பன கருத்தில் கொள்ளப்படும்.

ஆனால், காணி சுவீகரிப்பு தொடர்பான சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல், யாழ்ப்பாணத்தில் துரிதமாக விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால், ஓடுபாதையை விரிவாக்காமலேயே அங்குள்ள வசதிகளை தரமுயர்த்துவது மட்டும் தான் சிறந்த தெரிவு ” என்று மற்றொரு இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தரமுயர்த்தப்பட்ட பலாலி விமான நிலையம் இன்னும் ஒரு ஆண்டில் செயற்படத் தொடங்கலாம் என்று இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்தார்.

பலாலி விமானதளம் தற்போது 2.3 கி.மீ நீளமான ஓடுபாதையைக் கொண்டுள்ளது. 100 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய போயிங் 717 போன்ற ஒடுங்கிய உடலமைப்பைக் கொண்ட பயணிகள் விமானங்களை இங்கிருந்து இயக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *