மகிந்தவுடன் நெருக்கத்தை பேணவில்லை – குற்றச்சாட்டை மறுக்கிறார் கமலேஷ் சர்மா
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணி வந்ததாகவும், மகிந்த அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளாமல் செயற்பட்டதாகவும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார்.
கொமன்வெல்த் செயலர் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு நொவம்பரில், கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு சிறிலங்காவில் நடத்தப்பட்டது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளினால், இந்த மாநாடு சிறிலங்காவில் நடத்தப்படக் கூடாது என்று உலகெங்கும் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
எனினும், அந்தக் கோரிக்கைகளைப் புறக்கணித்து. மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதில் உறுதியாக இருந்தவர் கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மா.
இதன் மூலம், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு வழியேற்படுத்தியவர்.
மகிந்த ராஜபக்சவுடன் கமலேஷ் சர்மா நெருக்கமாக இருப்பதாகவும், மகிந்த அரசின் மனித உரிமை மீறல்களை அவர் கண்டு கொள்வதில்லை என்றும் அந்தக் காலகட்டத்தில் பரவலாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கே அவர் தற்போது பதிலளித்துள்ளார்.
அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து அதன் கொள்கைகள் கோட்பாடுகளை மேம்படுத்துவதே கொமன்வெல்த் அமைப்பின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ள கமலேஷ் சர்மா, தாம் ஐந்து தடவைகள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.