சிறிலங்கா அரசின் முடிவு – சீன நிறுவனம் வரவேற்பு
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதை வரவேற்றுள்ள சீன நிறுவனம், குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன துறைமுக பொறியியல் நிறுவனத்தின் துணை நிறுவனமான, சிஎச்ஈசி போட் சிற்றி கொழும்பு நிறுவனம், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தை ஒரு ஆண்டு காலம் இடைநிறுத்தி வைத்ததால், தமது நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும், குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவின் பொருளாதாரத்தில் சாதகமான பங்களிப்புக்களை செய்வதற்கும், இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பங்களிக்கவும், தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும், சீன நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.