சிறிலங்காவின் தலையில் கனரக ஆயுதங்களைக் கட்டிவிடத் துடிக்கும் பாகிஸ்தான்
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவர் மேஜர் ஜெனரல் ஜெயநாத் லொக்குஹேத்தாகொடகே இன்று, பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராணா தன்வீர் ஹுசைனைச் சந்தித்து நடத்திய பேச்சுக்களின் போதே இதற்கான உடன்பாடு காணப்பட்டுள்ளது.
“பாகிஸ்தான் எப்போதுமே, சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்டிருந்துள்ளது. உயர்வலு பாதுகாப்புத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு விநியோகின்ற பாரிய விநியோகஸ்தராகவும் இருக்கிறது. சிறிலங்கா தீவிரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு, பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியிருக்கிறது.” என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராணா தன்வீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இன்றைய பேச்சுக்களின் போது, பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு தளபாடங்கள் பெருமளவானவற்றை சிறிலங்காவுக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
சிறிய ஆயுதங்கள் தொடக்கம் கனரக ஆயுதங்கள் வரை விநியோகிப்பது, இந்த ஒத்துழைப்புத் திட்டத்தில் அடங்கியுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து கனரக ஆயுதங்களை வாங்குவதற்கு சிறிலங்காவுக்குத் தடையாக இருக்கும் நிதிப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கு கடன்அடிப்படையில் இவற்றை வழங்குவது மற்றும் சில நிறுவனங்களின் இலகு கடன்களின் மூலம், வாங்குவது என்று பாகிஸ்தான் அமைச்சர், இரண்டு தீர்வுகளையும் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.