துறைமுக நகர கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு சீன நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசு அறிவிப்பு
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு, சிறிலங்கா அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக சீன நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.
சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்தின் துணை நிறுவனமான, சிஎச்ஈசி துறைமுக நகர கொழும்பு நிறுவனத்துக்கு, சிறிலங்காவின் கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அமைச்சினால், இது தொடர்பான கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடனடியாக கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றும், அதற்கு மார்ச் 9ஆம் நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு 2015ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாள், அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை விலக்கிக் கொள்ளுவதாகவும், இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான இந்த திட்டத்தை, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இடைநிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.