இரண்டு தடவைகள் அமைச்சராகப் பதவியேற்ற சரத் பொன்சேகா
அண்மையில் சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரண்டு தடவைகள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்த மாதம் 25ஆம் நாள் சிறிலங்கா அதிபர் முன்னிலையில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.
சுபநேரத்தில் அவரது பதவியேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, முதலில் மத்திய, வடமத்திய, ஊவா மாகாண அபிவிருத்தி அமைச்சராக அவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர், மூன்று மாகாணங்களுக்கான அமைச்சரவை பொறுப்புள்ள அமைச்சராக பொன்சேகா நியமிக்கப்பட்டால், ஏனைய மாகாணங்களுக்கும் தனியான அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, சிக்கலை உணர்ந்த சிறிலங்கா அதிபரும், பிரதமரும், சரத் பொன்சேகாவுக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பதவியை வழங்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, அவர் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
சரத் பொன்சேகா இரண்டாவது தடவையாக பதவிப் பிரமாணம் செய்த போது, சுபநேரம் கடந்து விட்டதாகவும், ராகு காலத்திலேயே அவர் பதவியேற்றதாகவும் கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.