சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முட்டுக்கட்டை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிற்கு ஒத்துழைக்காத சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைது செய்வதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை வழங்கி ஒத்துழைக்க மறுத்தால், இராணுவத் தளபதி மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யலாம் என்று ஹோமகம நீதிவான் அண்மையில் ஆலோசனை கூறியிருந்தார்.
இதையடுத்து, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, குற்றப்புலனாய்வுத் துறையினர் சட்டமா அதிபரின் ஆலோசனையை கேட்டிருந்தனர்.
அதற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து, இப்போது இராணுவத்தளபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று, அதிகாரபூர்வமற்ற தகவல் குறிப்பு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை அடுத்த சிறிலங்கா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என்றும் அநித அதிகாரி கூறியிருக்கிறார்.
அதேவேளை இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. அதில், பங்கேற்ற பெரும்பாலானவர்கள், இராணுவத் தளபதிக்கு எதிரான சட்ட நடவடிக்கை தாமதிக்கப்பட வேண்டும்றே கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.