ஞானசார தேரருக்கு சலுகைகளை வழங்கிய சிறைச்சாலை ஆணையாளரின் பதவி பறிப்பு
வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பொறுப்பான, மூத்த சிறைச்சாலைகள் ஆணையாளர் அனுர எக்கநாயக்க நேற்று அதிரடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் உடனடியாக சிறைச்சாலைகள் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறப்புச் சலுகைகளை செய்து கொடுத்தார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 26 ஆம் நாள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஞானசார தேரர் மறுநாள் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை ஞானசார தேரரைப் பார்வையிட பெருமளவானோர் படையெடுப்பதால், வெலிக்கடைச் சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை, புலனாய்வு, பாதுகாப்பு ஆணையாளர் உபுல்தெனிய இதுகுறித்துத் தெரிவிக்கையில்,
‘ஞானசார தேரர் மருத்துவ பரிசோதனைகளுக்காகவே வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு கைதியைப் பார்வையிடுவதற்கு ஒரு நாளைக்கு மூவரை மாத்திரமே அனுமதிப்போம்.
ஆனால், ஞானசார தேரரைப் பார்வையிட மணித்தியாலத்துக்கு 100 பேர் வருகின்றனர் . அவர்களை சிறைச்சாலை வாயிலிலேயே திருப்பி அனுப்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.