மூத்த தமிழ் இதழாசிரியர் இரத்தினசிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்
இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் மூத்த இதழாசிரியரான- கே.கே.ஆர் என அழைக்கப்படும், கந்தர் இரத்தினசிங்கம் (வயது 87) இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
உடுப்பிட்டி- இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
இலங்கைத் தமிழ் இதழியல்துறையில் சுமார் 60 ஆண்டுகள், இவர் பணியாற்றியுள்ளதுடன், பல மூத்த தமிழ் ஊடகவியலாளர்களையும் உருவாக்கியவர்.
கண்டிப்புக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கே.இரத்தினசிங்கம் அவர்கள், இலங்கைத் தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவர். செய்தி எழுதுவதற்கான புதிய தமிழ் உரை நடை வடிவத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர்.
காலஞ்சென்ற மூத்த இதழாசிரியர் எஸ்.டி.சிவநாயகத்தின் வலதுகரமாக நான்கு பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இவர், ‘சுதந்திரன்’, ‘வீரகேசரி’ நாளிதழ்களில் உதவி ஆசிரியராகவும், ‘தினபதி’ நாளிதழ் மற்றும் ‘சிந்தாமணி’, ‘சூடாமணி’ வாரஇதழ்களின் பிரதி ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.
‘சுடர்ஒளி’ இதழின் நிறுவக ஆசிரியரான இவர், அதன் பிரதம ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.
தமது முகத்தை வெளிப்படுத்தாதக.இரத்தினசிங்கம் அவர்கள், தமிழ் ஊடகத்துறைக்கு காத்திரமான பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
இவரின் இறுதிக்கிரியைகள் நாளை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.