தெற்கில் ‘சிங்க லே’ பரப்புரை தீவிரம் – ‘இனவாத தீ’ பரவுகிறதா?
சிறிலங்காவின் தென்பகுதியில், சிங்க லே (சிங்கத்தின் இரத்தம்) என்ற இனவாதப் பரப்புரை தீவிரம் பெற்றுள்ள நிலையில், நுகேகொட பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் சுவர்கள், கதவுகளில், சிங்க லே என்று இனந்தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு நுகேகொட பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் வீடுகளை இலக்கு வைத்தே, எழுதப்பட்டுள்ளது.
இது அந்தப் பகுதி முஸ்லிம் மக்களை கிலேசமடையச் செய்துள்ளது. தம்மை அச்சுறுத்தும் நோக்கிலேயே இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சிங்கத்தின் இரத்தம் என்று பொருட்படும் வகையில், “சிங்க லே“ என்ற சிங்கள எழுத்துக்கள் மற்றும் வாளேந்திய சிங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் சிங்களவர்கள் மத்தியில் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது.
சிங்களவர்களின் வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருவது, ஏனைய சமூக்தினர் மத்தியில் அச்சத்தையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினருக்கு எதிரான இனக்கலவரம் ஒன்றை இலக்கு வைத்து இத்தகைய பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.