பத்தாண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்
நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இன்று சிறிலங்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் 6ஆம் நாள் தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய கையுடன், நோர்வே வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணம் இடம்பெறவுள்ளது.
நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில், சாதகமான முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர், நோர்வேயின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.