மேலும்

இந்திய வெளிவிவகாரச் செயலர் அடுத்தவாரம் கொழும்பு வருகிறார்

Jaishankarபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று சிறிலங்காவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வெளிவிவகாரச்  செயலர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்தவாரம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அதிகாரபூர்வ பயணமாக இந்திய வெளிவிவகாரச் செயலர் வரும் 10ஆம் நாள் கொழும்பு வருவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் சிறிலங்கா பயணத்துக்கான முன்னாயத்தங்களை மேற்கொள்வதும், இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்துக்கான திட்ட வரைவுகளை தயாரிப்பதுமே, இவரது பயணத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிய வருகிறது.

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடக்கவுள்ள  இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கலந்து கொள்ளவுள்ளார்.

வரும் 10ஆம் நாள் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகாரச் செயலர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார்.

இந்தப் பேச்சுக்களில், இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் குறித்தும், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அதேவேளை, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்திப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இன்று கொழும்பு வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர்வரும் 6ஆம் நாள்  நாடுதிரும்பியதும், அடுத்த  சில நாட்களில் இந்திய வெளிவிவகாரச் செயலரின் கொழும்பு பயணமும் இடம்பெறவுள்ளது முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *