சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணையை மோடி அரசு ஏற்காது – முன்னாள் இந்திய இராஜதந்திரி
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை இந்தியாவின் மோடி அரசாங்கம் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது என்றும், சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென்.
கல்கத்தா ரெலிகிராப் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இத்தகையதொரு முன்னுதாரணம், இதுபோன்ற விசாரணைகளை காஷ்மீரிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையைத் தூண்டி விடும் என்று இந்தியா எச்சரிக்கையாக இருக்கிறது.
தனது அண்டை நாடாக இருப்பதால், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை நடத்துவதற்கு இந்தியா இடமளிக்காது என்ற இரண்டாவது காரணமும் இருக்கிறது.
எமது செல்வாக்கைப் பலப்படுத்த வேண்டிய பிரதேசம் இது. அதற்குப் பதிலாக எமக்கு ஏன் அனைத்துலகத் தலையீடு தேவை?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.