மேலும்

சம்பந்தன் – விக்னேஸ்வரன் விரைவில் சந்திப்பு – கருத்து முரண்பாடுகள் குறித்து பேசுவர்

Sam-CVநாடாளுமன்றத் தேர்தலின் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும், அவர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக, அவருடன் தாம் நேரில் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை 10.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை நடந்த இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,

”இந்த விடயம் தொடர்பாக நானும் கவனம் செலுத்தியுள்ளேன். வடக்கு மாகாண முதல்வரின் செயற்பாடுகள் குறித்தும் அவருடைய அறிக்கை தொடர்பாகவும் நான் விரைவில் அவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளேன்.

அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கு, வடக்கு மாகாண முதல்வர் எனக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

அத்துடன் என்னை சந்திப்பதற்குத் தயாராக  இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அவரை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதோடு எதிர்காலத்தில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் பேசவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *