உள்நாட்டு விசாரணைக்கு கூட்டமைப்பை இணங்க வைக்குமாறு மோடியிடம் கோருவார் ரணில்
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரவுள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய நண்பரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை மறுநாள் இந்தியாவுக்கு தனது முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் வரும் 15ஆம் நாள்- செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசும் போது, ஐ.நா விசாரணை அறிக்கை மற்றும் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் வேண்டுகோள் விடுக்கக் கூடும் என்று இந்திய, மற்றும் சிறிலங்கா அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.