வரும் 15ஆம் நாள் புதுடெல்லி செல்கிறார் ரணில்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 15ஆம் நாள் புதுடெல்லிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 17ஆம் நாள் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை, இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
இம்மாத இறுதிப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கமைய, இருநாடுகளின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் பொருத்தமான பயண நாளை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து, வரும் 15ஆம் நாள், ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் இடம்பெறும் என்று புதுடெல்லி இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், இருநாட்டு அரசாங்கங்களும், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னமும் வெளியிடவில்லை.