ஜெனிவா தொடர்பாக பொது நிலைப்பாடு – உடன்பாட்டில் கையெழுத்திடவும் ஐதேக, சுதந்திரக் கட்சி முடிவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள் தொடர்பாக, தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றை எட்டவுள்ளதுடன் இதுபற்றிய புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொள்ளவுள்ளன.
பிரதானமாக, சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கைக்குப் பதிலளிப்பது மற்றும்,உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக இந்த புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது.
மேலும் இந்த புரிந்துணர்வு உடன்பாடு, அனைத்துலக மற்றும் தொழிலாளர் விவகாரங்களில் பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதை உள்ளடக்கியதாக இருக்கும்.
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவியேற்பு முடிவடைந்த பின்னர், இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று ஐதேகவின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை, போர்க்குற்ற விசாரணை போன்ற அனைத்துலக விவகாரங்கள், உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் பொதுவான கூட்டு நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.