மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த எதிர்ப்பு- பாரஊர்திகளை மறித்து போராட்டம்
மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சியசாலையை நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, மத்தல விமான நிலைய களஞ்சியத்தில் சேமிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
மத்தல விமான நிலையத்தின் களஞ்சியசாலைகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றை நெல்லைச் சேமித்து வைக்கப் பயன்படுத்த, விமான சேவைகள் நிறுவனத்தினால் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று முதல் தொகுதி நெல்லை ஏற்றிய பாரஊர்திகள் மத்தல விமான நிலையத்துக்குச் சென்றன.
ஒரு பாரஊர்தி, விமான நிலைய களஞ்சியத்தை் அடைந்த போதும், ஏனைய பாரஊர்திகளை வழிமறித்து, சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் மத்தல விமானநிலையத்துக்குச் செல்லும் பாதையில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து காவலதுறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.