எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் தலையிடேன் – பங்காளிக் கட்சிகளிடம் மைத்திரி உறுதி
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று காலை நடந்த சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் தமது தலையீடு ஏதும் இருக்காது என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்பாகவும், ஐதேகவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏற்படுத்தியுள்ள உறவு தொடர்பாகவும் தாம் சில பிரச்சினைகளை எழுப்பியதாக குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில், அதனை நாடாளுமன்றத்தில் சுதந்திரமான எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபரைத் தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.