ஐ.நா பொதுச்சபையில் சிங்களமொழியில் உரையாற்றுவார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்களத்தில் உரையாற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா பொதுச்சபையில் வரும் செப்ரெம்பர் 30 ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தமது சொந்த நாட்டில் பேசப்படும் மொழியிலேயே உரையாற்றுவது வழக்கம். இந்தியத் தலைவர்கள் பலரும் ஹிந்தி மொழியில் உரையாற்றியுள்ளனர்.
அந்த வகையில், சிறிலங்கா அதிபர் சிங்கள மொழியில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர், ஐ.நாவில் சிறிலங்கா தலைவர்கள் சிங்கள மொழியில் உரையாற்றவில்லை. மகிந்த ராஜபக்ச ஆங்கிலத்திலேயே உரையாற்றியிருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஆங்கிலத்தில் உரையாற்றி விட்டுத் திரும்பிய போது, அவருக்கு வாழ்த்துக் கூறிய மாலைதீவு அதிபர் அடுத்த முறை சிங்களத்தில் உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.