சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா
இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை, சிறிலங்கா கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது இந்தியா. இது தொடர்பான நிகழ்வு நேற்று கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இந்தக் கப்பலை நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்கவிடம் கையளித்துள்ளார்.
இந்தியக் கடலோரக் காவல்படையினர் வரஹா என்ற பெயரில் இயங்கிய இந்த ரோந்துக் கப்பல், 2006ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உதவுவதற்காக சிறிலங்கா கடற்படைக்கு இந்தியாவினால் வழங்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு தொடக்கம், சிறிலங்கா கடற்படையினால் கட்டணம் பெறாத குத்தகை அடிப்படையில், சாகர என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலே, நேற்றுமுறைப்படி இந்தியாவினால் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போர்க்கப்பல், 75 மீற்றர் நீளத்தையும், 11 மீற்றர் அகலத்தையும் கொண்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிப்பதற்கான நடவடிக்கையில் இந்தப் போர்க்கப்பல் முக்கிய பங்காற்றியது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், ஆழ்கடல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.