புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்பு
புதிதாகத் தெரிவாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன் போது. ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களான நிமால் சிறிபால டி சில்வா மற்றும், ஜோன் செனிவிரத்ன ஆகியோர், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளவர்களுக்கான கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ச தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.