சிறிலங்காவில் அரசியல் கைதிகளே இல்லையாம்- விஜேதாச ராஜபக்ச கூறுகிறார்
சிறிலங்காவில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று மீண்டும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே, சிறிலங்காவில் கடைசியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி.
அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அரசியல் கைதிகள் எவரும் சிறைகளில் இல்லை.
போர்க் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கூட குண்டு வைத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களை அரசியல் கைதிகளாக கருத முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அரசியல் கைதிகளாகத் தான் கருத வேண்டும் என, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில நாட்களுக்கு முன்னர், பிபிசியிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.