பிரகீத்தை கடத்திய இரு இராணுவப் புலனாய்வாளர்கள் கைது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களான இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா மிரர் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
2012 ஜனவரி மாதம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டார்.
அவரைக் கடத்திச் சென்று மின்னேரியா இராணுவ முகாமில் இரண்டு கேணல் தர அதிகாரிகளிடம் ஒப்படைத்த இரு தமிழ் புலனாய்வாளர்களே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பிரகீத் எக்னெலிகொடவை மின்னேரிய இராணுவ முகாமில் வைத்து பொறுப்பேற்ற இரண்டு, கேணல் தர அதிகாரிகளும் இன்று கைது செய்யப்படுவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடத்தலின் போது, கடத்தல்காரர்கள் கடைசியாக பக்கமூன பகுதியில் இருந்து தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களுக்குள் இந்த கடத்தில் வழிவகாரம் பற்றிய முழு விபரங்களும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.