20ஐ நிறைவேற்றாமல் நாடாளுமன்றம் கலைக்கப்படாது – ராஜித சேனாரத்ன
தேர்தல் முறையை மாற்றியமைக்கும் 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையில், நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்ற ஊகங்கள் கடந்த சில நாட்களாகப் பரவி வரும் நிலையிலேயே, கொழும்பில் நேற்று நடந்த வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தல் முறையை மாற்றியமைப்பது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றாமல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக கட்சிகளுக்குள் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.