அமெரிக்க – சிறிலங்கா இராஜதந்திர உறவு புதிய மட்டத்தை எட்டும் – மங்கள சமரவீர
அமெரிக்கா இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்தவாரம் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக கொழும்பு வந்துள்ள, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.
வொசிங்டனில் வரும் 12ம் நாள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும், இதன்போது, சிறிலங்காவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுடன் நெருக்கமாகப் பணியாற்றவும் சிறிலங்கா விரும்புவதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் இனி புதிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறிய மங்கள சமரவீர, அதன் ஆரம்பக் கட்டமாகவே அமெரிக்க இராஜாங்கச் செயலருடனான சந்திப்பு இருக்கும் என்றும் தெரிவித்தார்.