மனித உரிமைகள் பிரச்சினையை தீர்க்க சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயார் – நிஷா பிஸ்வால்
மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலையில் கொழும்புக்கு இரண்டு நாள் பயணமாக வந்து சேர்ந்த நிஷா பிஸ்வால், சிறிலங்கா அரசதரப்பு மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுக்களை நடத்தியிருந்தார் நிஷா பிஸ்வால்.
அதையடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிஷா பிஸ்வால்,
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதற்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி எதிர்பார்த்துள்ளார்.
மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், நல்லாட்சிக்கும் சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது.
சிறிலங்கா முன்நொக்கிச் செல்வதற்கு எம்மை ஒரு பங்காளராக கருதிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று பிற்பகலில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் வைத்து, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேசினார்.
இதன்போது அவர், அமைதியும், ஜனநாயகமும், சுபீட்சமும் மிக்க சிறிலங்காவைத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நிஷா பிஸ்வால் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்புக்களில் தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப்பும் கலந்து கொண்டார்.