விஜித ஹேரத் தலைமையிலான சிறிலங்கா குழு ஜெனிவா செல்கிறது
அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறிலங்கா குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்கா குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
கொழும்பிலிருந்து செல்லும் தொழில்நுட்பக் குழு மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பணியகத்துடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முந்தைய ஐ.நா. தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அனைத்துலக சமூகத்திற்கு விளக்கமளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் பகிர்ந்திருந்த, சிறிலங்கா குறித்த முன்கூட்டிய எழுத்துப்பூர்வ அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
