சிறிலங்காவுக்கு எரிபொருள் வழங்க முன்வந்தது சீனா
சிறிலங்காவுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு, சீனா முன்வந்துள்ளது.
போதுமான எரிபொருள் கையிருப்பை பெறுவதில் சிறிலங்கா எதிர்கொண்டுள்ள நெருக்கடியை அடுத்து, இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் உதவி கோரியிருந்தது.
இதையடுத்து சீனா ஆதரவளிக்க இணங்கியுள்ளது.
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கி சென்ஹாங் நேற்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்தார்.
இதன்போதே சீனா எரிபொருளை விநியோகிக்கும் என உறுதியளித்துள்ளார்.
சீனாவில் இருந்து முதல் எரிபொருள் ஏற்றுமதி இந்த மாத நடுப்பகுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினோபெக் எனர்ஜி லங்காவின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் எரிபொருள் இருப்புகளுக்கு மேலதிகமாக இந்த விநியோகம் இடம்பெறும்.
எரிபொருள் நெருக்கடியின் காரணமாக சீனாவிடம் கோரிக்கை விடுத்தோம்.
சிறிலங்காவின் பழைமையான மற்றும் நம்பகமான நண்பன் என்ற முறையில் அது சாதகமாகப் பதிலளித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
