ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கொழும்பு பயணம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா (Masato Kanda) இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை கைத்தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ வரவேற்றார்.
இன்று கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கட்டுப்பாட்டுக் கோபுரத்தை ஆய்வு செய்ய உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பின்னர், தனியார் துறை பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு மதிய விருந்தில் கலந்துகொள்வார்.
பிற்பகலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிறிலங்கா வதிவிடத் தூதரகத்தில் நடைபெறும் வரவேற்பு மற்றும் பணியாளர் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
நாளை, கன்டாவும் அவரது குழுவினரும், டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக கேகாலை மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அதிபர் அனுரகுமார திசாநாயக்கவையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
மசாட்டோ கன்டா வரும் புதன்கிழமை சிறிலங்காவில் இருந்து புறப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
