குமார ஜயக்கொடிக்கு எதிரான வழக்கு – அடுத்தவாரம் விசாரணை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கோடவெல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் ஜேவிபி-என்பிபி அமைச்சர் ஒருவர் மீதான முதல் வழக்கு இதுவாகும்.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
அமைச்சர் குமார ஜயக்கொடி மீது கடந்த வாரம் ஊழல் குற்றச்சாட்டில் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
2014ஆம் ஆண்டு, லங்கா உர நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய போது, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தேவையற்ற நிதி இலாபம் ஈட்ட அனுமதித்ததன் மூலம், சிறிலங்கா அரசுக்கு 8.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள, குற்றப்பத்திரத்தில் 21 சாட்சிகளை அழைக்கவும், 29 நீதிமன்ற தயாரிப்புகளை சமர்ப்பிக்கவும் அரசு தரப்பு பட்டியலிட்டுள்ளது.
