அவசரகால நிலை மீண்டும் நீடிப்பு
பொது அவசரகால நிலையை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு, சிறிலங்கா அதிபரின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொது அவசரகால சூழ்நிலையை மேற்கோள்காட்டி, பொது பாதுகாப்பை உறுதி செய்தல், பொது ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அவசர நிலை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறுவதற்கு அவசரகால அதிகாரங்கள் பயன்படுத்தப்படாது என்றும் அரசிதழில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மற்றொரு சிறப்பு அரசிதழ் மூலம், மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, சாலைகள், நீர், உணவு வழங்கல், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள், நோயாளர் காவு வண்டி சேவைகள், மத்திய வங்கி, அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவைகள், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு, அஞ்சல் மற்றும் ஊடக சேவைகள், நிலச்சரிவு தடுப்பு, விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
