சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார் – மகிந்த ராஜபக்ச
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராகவே இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மகிந்த ராஜபக்ச “நிச்சயமாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக அதனை வழங்கமாட்டார் என்று எனக்குத் தெரியும்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் சூழ்ச்சிகளில் ஈடுபடாது, ஜனநாயக முறையிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றும்.
உள்ளூராட்சித் தேர்தலில் இந்த அரசாங்கத்தை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அரசாங்கத்தின் செயற்திறன் மீதான கருத்து வாக்கெடுப்பாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.