மூகாம்பிகை அம்மனை வழிபட நாளை உடுப்பி செல்கிறார் ரணில் – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நாளை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை காலை 11.15 மணியளவில் கொல்லூர் அருகே உள்ள அரசிரூர் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வந்திறங்கும் சிறிலங்கா பிரதமர், அங்குள்ள விடுதி ஒன்றில் தயாராகிக் கொண்டு மூகாம்பிகை அம்மன் ஆலயத்துக்குச் செல்வார்.
நாளை காலை 11.50 மணியளவில் அங்கு சிறிலங்கா பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படும். முகாம்பிகை அம்மனை தரிசித்த பின்னர், அவர், சண்டிக ஹோமத்திலும் பங்கேற்பார்.
மதிய போசனத்தையும் அங்கேயே முடித்துக் கொண்டு, 2.20 மணியளவில் மீண்டும் உலங்குவானூர்தி இறங்குதளத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வார்.
சிறிலங்கா பிரதமரின் வருகையையொட்டி மூகாம்பிகை அம்மன் ஆலயப் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நாளை காலை 10 மணி தொடக்கம், பிற்பகல்1.30 மணிவரை ஆலயத்துக்குள் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 27ஆம் நாள் இந்த ஆலயத்தில் வழிபாடுகளை செய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெங்களூரு சென்றிருந்தார்.
எனினும், கடும் மழை பெய்து கொண்டிருந்த மோசமான காலநிலையால் ஆலய தரிசனத்தை கைவிட்டு கொழும்பு திரும்பும் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.