கொக்குவிலில் வாள்வெட்டு – இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் படுகாயம்
கொக்குவில் பகுதியில் இன்று பிற்பகல் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி, கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர், படுகாயமடைந்தனர்.
கொக்குவில்- பொற்பதி பகுதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் முறைப்பாடு ஒன்று குறித்து விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் மீது, நான்கு உந்துருளிகளில் வந்த 10 வரையிலான நபர்களே காவல்துறையினர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவலர்களான சுரேந்திரன், தம்மிக ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.