வல்லிபுரக்கோவிலில் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார் சிறிலங்கா கடற்படைத் தளபதி
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி நேற்று பருத்தித்துறை- வல்லிபுரக்கோவில் பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார்.
சிறிய பாரஊர்தி ஒன்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்களை சிறிலங்கா கடலோரக் காவல்படையினர் நேற்றுமுன்தினம் மாலை தடுத்து வைத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்து குழுவினர், கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தி, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களையும் பாரஊர்தியையும் மீட்டுச் சென்றனர். அவர்கள் கடலோரக் காவல் படையினரின் மிதிவண்டிகளையும் சேதமாக்கினர்.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடலோரக் காவல் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியிருந்தனர். இதனால் நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
இந்த தாக்குதலின் போது கடலோரக் காவல்படையைச் சேர்ந்த ஒருவர் தலையில் பலத்த காயமடைந்தார். அவர் காங்கேசன்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் மற்றும் கடற்படைத் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு மேலதிக சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை தாக்குதல் நடந்த இடத்துக்கு சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று சென்று பார்வையிட்டார்.
அத்துடன் சம்பவம் நடந்த பகுதியில் நேற்று பெரும் எண்ணிக்கையான கடற்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.