இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் – வெற்றி பெற்றார் ராம்நாத் கோவிந்த்
இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் நாள் நடந்த தேர்தலில் இவர் 66.65 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
புதிய குடியரசுத் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இந்தியாவின் 776 நாடாளுமன்ற மற்றும் 4120 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் இன்று இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் எண்ணப்பட்டன.
இதன் முடிவு சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பாஜக வேட்பாளரான, ராம்நாத் கோவிந்த் 702, 644 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 66.65 வீத வாக்குகள் கிடைத்தன.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார்,367,314 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில், 34.35 சதவீதமாகும்.
புதிய குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.