காவல்துறை துப்பாக்கிச் சூட்டை அடுத்து வடமராட்சியில் பதற்றம் – சிறப்பு அதிரடிப்படை குவிப்பு
வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள காவல்துறையினரின் காவலரணும், நெல்லியடியில் காவலர் ஒருவரின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞனே பலியானார்.
சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற போது, தாம் தடுத்தும் நிற்காமல் சென்றதாலேயே கன்ரர் வாகனம் மீத துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 10 நாட்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியிருந்தார்.
இவர் நேற்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு, வல்லிபுரக் கோவிலுக்குச் செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார் என்றும், சட்டவிரோத மணல் ஏற்றும் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே,காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதை அடுத்து, சிறிலங்கா காவல்துறையினரின் வாகனம் ஒன்றின் மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.இதில் அந்த வாகனம் சேதமடைந்தது.
அத்துடன் துன்னாலை அமைக்கப்பட்டிருந்த காவல்துறையினரின் காவலரண் ஒன்றும் இனந்தெரியாத நபர்களால் அடித்து நொருங்கப்பட்டது.
இதனிடையே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் வீடும் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.
நெல்லிடியில் உள்ள வீட்டின் மீது சுமார் 20 பேர் கொண்ட- முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வந்த குழுவினர் வீட்டின் மீதும், வீட்டுக்குள் நுழைந்தும் தாக்குதல் நடத்திய பொருட்களை சேதப்படுத்தினர்.
அதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பதற்றமான சூழல் நிலவுவதால், பெருமளவிலான சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
படங்கள் – நன்றியுடன் ‘உதயன்’