பாகிஸ்தான் போர்க்கப்பலில் உதவிப் பொருட்களுடன், மீட்புக் குழுக்களும் கொழும்பு வருகை
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா மக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பிஎன்எஸ் சுல்பிகார் என்ற கப்பலிலேயே உதவிப் பொருட்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் பதில் தூதுவர் சப்ராஸ் அகமட் கான் சிப்ரா அதிகாரபூர்வமாக கையளித்தார்.
உலர் உணவுகள், மருந்துகள், வெள்ளத்தை அகற்றும் கருவிகள், ஏனைய உதவிப் பொருட்கள் இந்தக்கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தக் கப்பலில், தேடுதல் மற்றும் மீட்புக்கு உதவும் உலங்குவானூர்தி, மீட்புப் படகுகள், மருத்துவக் குழுக்கள், சுழியோடிகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
ஏற்கனவே இந்தியக் கடற்படைக் குழுக்களும் மீட்பு, தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் மீட்புக் குழுவினரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.