சீன நீர்மூழ்கி மீண்டும் கொழும்பு வரத் திட்டம் – அனுமதி மறுத்தது சிறிலங்கா
சீன நீர்மூழ்கி ஒன்றை இம்மாதம் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிறுத்துவதற்கு சீனா விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக, உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா வந்துள்ள சூழலிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் தனது நீர்மூழ்கி ஒன்றை இம்மாதம் தரித்து நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியதாகவும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டதாகவும் சிறிலங்கா அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தும் என்பதால், நீர்மூழ்கியை தரித்து நிறுத்துவதற்கான சீனாவின் கோரிக்கைக்கு எந்த நேரத்திலும் இணக்கம் தெரிவிக்க வாய்ப்பில்லை என்று பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அதேவேளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி, இம்மாதத்தில் சீன நீர்மூழ்கியை தரித்து நிறுத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் இது நடக்கலாம். என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, கொழும்புத் துறைமுகத்தை மே 16ஆம் நாள் அளவில் பயன்படுத்த சீனா அனுமதி கோரியிருந்ததாகவும், கூறியுள்ளார்.
அதேவேளை, சீனத் தூதரகத்துக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று, சீன நீர்மூழ்கி கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரியதை உறுதிப்படுத்தியதுடன், ஆனாலும் இன்னமும் பதிலுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டது.