சிறிலங்காவில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்கு 6000 காவல்துறையினர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான சிறப்பு பாதுகாப்பில், 6000 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதுகுறித்து சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தகவல் வெளியிடுகையில்,
‘ஐ.நா வெசாக் நிகழ்வில் பங்கேற்க சிறிலங்கா வரவுள்ள இந்தியப் பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க சிறிலங்கா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியப் பிரதமர் மற்றும் ஐ.நா வெசாக் நிகழ்வு ஆகியவற்றின் பாதுகாப்புக்கு 6000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதில் சாதாரண காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.
கொழும்பு, கண்டி மாவட்டங்களில், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் நாடெங்கும் வெசாக் நிகழ்வுகள் நடைபெறும் விகாரைகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
இந்தியப் பிரதமரின் வருகையின் போது எந்த நாச வேலைகளையும் மேற்கொள்ள முடியாது, இந்த விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.