விக்கி தலைமையில் தமிழர்களுக்கு புதிய தலைமைத்துவம் தேவை – என்கிறார் சுரேஸ்
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகிறது என்று, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற “எழுக தமிழ்” நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இன்றுடன் பத்து நாட்களுக்கும் மேலாக கேப்பாப்பிலவு மக்கள் தங்களது காணிகளை விடுவிப்பதற்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ் மக்களுக்கு இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் – தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஏன் நேரில் சென்று சந்திக்கவில்லை?
இதனால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்களுக்கான புதிய தலைமை ஒன்று தேவையாகவுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதன் ஊடாக எந்தவொரு நன்மைகளையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை.
மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்துவதைத் தடுக்க பலர் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களே எழுக தமிழ் பேரணிக்கு எதிராக செயற்பட்டனர்.
தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமாக இருந்தால் அவர்களது உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
40 வருடங்கள் பல இலட்சம் மக்களின் உயிர்களை தியாகம் செய்து பல்லாயிரக்கணக்கானவர்களை பலி கொடுத்து நாங்கள் சேர்த்து வைத்த அவ்வளவு சொத்துக்களையும் பறி கொடுத்து விட்டு நாங்கள் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு இன்றும் நாங்கள் போர்க்கொடி உயர்த்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கின்றோம்.
மக்கள் மனம் வைத்தால் எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் ஒன்றும் தோற்றுப் போனவர்களல்ல. நிச்சயமாக தமிழ் மக்கள் வெற்றியடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.